Thursday, April 11, 2013
ஈழமே நீ இடுகாடா? - பூர்ணகுரு !
கொக்கரக்கோ கோ ... கொக்கரக்கக்கக்கோ கோ …
அமைதியின்றி கழிந்த பகல் இரவுகள்
ஆறுகளாய்ப் பாய்ந்த பிணக் குருதிகள்
இம்மியளவும் இன்பம் கிடைக்கா இம்சைகள்
ஈவு இரக்கமின்றி கொன்ற கொலைகாரர்கள்
உறக்கம் என்பது மரணத்தினாலான தூக்கங்கள்
ஊர் உலகம் கண்டுங்காணாதக் கொடுமைகள்
எழிலழகை ரசிக்கத் திரானியில்லா உறவுகள்
ஏற்றம் வருமோ காலமறியா ஏக்கங்கள்
ஐந்தும் ஐம்பதும் போர்க்களத்தின் பருவங்கள்
ஒற்றுமை மட்டுமே கொண்ட உணர்வுகள்
ஓங்கி அடிக்கும் உள்ளத்தின் உருவங்கள்
ஔவை ஆத்திச்சூடி வெறும் ஏட்டின்பதிவுகள்
கண்ணீர்க் கனவில் காலம் நனைகையில்
காத்திருக்கும் சுதந்திரம் தூரம் போகுமோ ... ?
மழைவர வானம்பார்த்து ஏங்கியோர் மத்தியில்
குடைப்பிடித்து நின்றானாம் சிறுவன் - நம்பிக்கை !
இதோ,
காலச்சேவல் வையகம் கேட்கக் கூவிவிட்டான்
சுதந்திரச் சூரியன் கிழக்கில் எழுந்துவிட்டான்
ஈழம் மீளுமா கேட்டவருக்குக் காட்டு அதோ பார் எம் விடியல் !
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment