காதலாகி - ரமணியன்
கருத் தறிந்த மென்மை காதல்,
கரு தரியா உண்மை காதல்:
காலங்கள் பல கடந்தாலும்
பாலமென அமைவது ----------!
விடலை பருவ இளைஞனவன்
வாலை குமரி கன்னியவள்
கண்கள் மட்டுமே பரிமாறி கொண்ட
விண்மீன் காதல் விருந்துகள்
கண்ட கண்ட நேரங்களில்,
கண்கள் கண்ட நேரங்களில் .
கண்டவுடன் கண்களில் ஜொலிப்பு
தீண்டாமலே மனதில் களிப்பு
வார்த்தை பரிமாற்றம் இல்லை
வருத்தமும் இல்லை அதனால்
வளர்ந்தது காதல் வானுயர
வார்த்தைகள் வளராவிட்டாலும்
பெண்மையை காத்தவன் அவன்
ஆண்மையை போற்றியவள் அவள்.
கற்பு கலையாத காதலிலும்
சற்றே விளையாடிவிட்டாள் காலமகள்
நங்கையவள் கரம் பிடித்தது வேறொருவனை
நம்பியும் மாலையிட்டான் மற்றொருவளை
பத்தாண்டுக்கு பின் தற்செயல் சந்திப்பு
புத்துணர்ச்சி தரும் கடற்கரைதனிலே.
அவள் கைப்பிடித்து சிறுவன் ஒருவன்
அவன் கைகோர்த்து சிறுமி ஒருவள்
ஓடி விளையாடிய குழந்தைகள்
தேடி வந்தன ஆச்சர்ய கூச்சலுடன்.!
"அம்மா, இவளுக்கும் உங்கள் பெயரே"
ஆரவார கூவல் மகனிடமிருந்து !!
சிறுமியும் கூறுவாள் சிலிர்ப்புடன் ,
"அப்பா, உங்கள் பெயர் தான் அண்ணனுக்கு".!!!.
காலங்கள் பல கடந்தாலும், மௌனக்காதலை போற்றிட
பாலமென அமைந்தார்களோ மக்கள் செல்வங்கள் !
ரமணியன்
No comments:
Post a Comment